புகைத்து தள்ளும் கர்ப்பிணிகளே..!


புகைப் பிடிக்கும் பெண்களின் வயிற்றில் வளரும் சிசுக்களின் மத்திய நரம்பு மண்டலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மனதிற்குப் பிடித்த இசையைக் கேட்கவேண்டும் என்பார்கள்…

சந்தோசமான விசயங்களைப் பார்க்க வேண்டும் என்பார்கள். காரணம் கருவில் உள்ள குழந்தைக்கு இவை நல்ல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால்தான். அதேசமயம் புகைப்பழக்கத்திற்கு ஆளான கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

புகை பிடிக்கும் பழக்கம் பெண்களுக்கு இருந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்து வந்தனர். இதை பலரும் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் சிகரெட் பிடித்தால் அவரின் பிள்ளைக்கு மட்டுமல்லாது பிள்ளைகளின் பிள்ளை அதாவது வருங்கால பேரக் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என கடந்த கால ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

அதாவது சிகரெட் பிடிக்கும் கர்ப்பிணிகளின் வருங்காலப் பேரக் குழந்தைக்கும் ஆஸ்துமா போன்ற பரம்பரை வியாதிகள் தொற்றக் கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரபணு பாதிப்பு

கர்ப்பிணிகள் புகைப்பிடிக்கும் போது அது கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளின் மோசமான மரபணுக்களைத் தூண்டி விடுகின்றது. பின்னர் இந்தத் தூண்டுதல் அக்குழந்தையின் உள்ளேயே இருந்து அது வளர்ந்து பெரியாளாகி இன்னொரு குழந்தைக்கு தந்தையாகவோ தாயாகவோ மாறும் போது அவர்களின் குழந்தைகளுக்கு உள்ளேயும் செலுத்தப்படுகின்றது. இது பின்னாளில் குறித்த பெண்ணின் பேரக் குழந்தையைப் பாதிக்கும் நோயைக் கொண்டு வருகின்றது.

கர்ப்பிணிகளிடம் ஆய்வு

வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள துர்ஹம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கருத்தரித்த பெண்கள் முதல் சிசுவின் வளர்ச்சி முழுமையடைந்த கர்ப்பிணி பெண்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் இது குறித்த ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர்.

புகைக்கும் கர்ப்பிணிகள்

இந்த ஆய்விற்காக 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் அன்றாடம் சராசரியாக 14 சிகரெட்டை ஊதித்தள்ளும் ரகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் வயிற்றில் வளரும் கருக்களின் வளர்ச்சியும், அசைவுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

சிசுவின் உற்சாகம்

24, 28, 32 மற்றும் 36-வது வாரங்களில் அந்த பெண்கள் அனைவரும் ‘4D’ அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்களினால் பரிசோதிக்கப்பட்டனர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத பெண்களின் வயிற்றில் வளரும் கருக்கள், தங்களது தளிர் கைகளால் முகம், தலை போன்ற பாகங்களை தொட்டுப்பார்க்க தொடங்கின.

துடிப்பற்ற சிசுக்கள்

ஆனால், புகை பிடிக்கும் பழக்கத்துக்கு உள்ளாகியிருந்த பெண்களின் கருக்கள் எவ்வித துடிப்பும் இன்றி, வெறும் அசைவோடு நிறுத்திக்கொண்டன.
ஆய்வு முடிவு சொல்வதென்ன

இந்த ஆய்வின் அடிப்படையில் இது தொடர்பான இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக எட்டிவிட முடியாது. இந்த முடிவுகள் புகை பிடிக்கும் பெண்களை பேயாக சித்தரித்து காட்டவோ, அவர்களை அவமானப்படுத்தவோ வெளியிடப்படவில்லை. மாறாக, புகை பிடிக்கும் பழக்கத்தை பெண்கள் விட்டொழிக்க வேண்டும் என்ற கருவியாகவும், பாடமாகவும் இந்த முடிவை அணுக வேண்டும் என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான நட்ஜா ரீஸ்லேண்ட்.

புகை கருவிற்கு பகை

இதை வைத்து பார்க்கையில், புகை பிடிக்கும் பெண்களின் வயிற்றில் வளரும் சிசுக்களின் மத்திய நரம்பு மண்டலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதன்மூலம் கர்ப்பகாலத்தில் புகைப்பிடிப்பது, தாயையும் கருவையும் ஆபத்தில் தள்ளிவிடும் என கனடா சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments