தோற்றவர்களின் கதை - ஜே.கே.ரவுலிங்


ங்கிலாந்து ராணியைவிடப் பெரிய கோடீஸ்வரப் பெண்மணி அவர். எழுத்தின் மூலமாக மட்டுமே 6,000 கோடி ரூபாய்க்கும் மேலாகச் சம்பாதிக்க முடியும் என நிரூபித்த உலகின் முதல் பில்லியனர் எழுத்தாளர் அவர். 

ஆனால், ஒரு காலத்தில் கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகையில் வாழ்க்கை நடத்திய பெண் அவர். மிகவும் அவமானகரமான, அடுக்கடுக்கான தோல்விகளால் புடம்போடப்பட்ட மனிதர் அவர்.

அவரது ஹாரி பாட்டர் வரிசைப் புத்தகங்கள் 40 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. 75-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது கதைகள் வாசிக்கப்படுகின்றன. எழுத்துலகில் மட்டுமல்ல… திரையுலகிலும் ஹாரி பாட்டர் படங்கள் வசூலை வாரிக்குவித்துள்ளன. இன்று, ஜே.கே.ரவுலிங் பற்றி தெரியாதவர்கள் உலகில் குறைவு.அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறினார்: “நாம் தோல்விகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதில்லை. நான் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி அடைந்து நொந்துபோயிருந்த நேரத்தில், வாழ்க்கையில் ஓரளவு வெற்றி பெற்ற யாராவது என்னிடம் வந்து, ‘நீ பல தோல்விகளைச் சந்தித்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’ என்று சொல்லியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.” 

இங்கிலாந்து நாட்டில் 1965-ம் ஆண்டில் பிறந்த ஜே.கே.ரவுலிங், சின்ன வயதிலேயே புத்தகங்களை தேடித்தேடி வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார் . அவரது எழுத்து ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது பள்ளி ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வழிகாட்டினர். 1982-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதிய ஜே.கே.ரவுலிங், தேர்வில் நிராகரிக்கப்பட்டார். அவமானத்தில் கூனிக் குறுகிப்போன ஜே.கே.ரவுலிங், வீட்டைவிட்டு வெளியில் வருவதைப் பல நாட்கள் தவிர்த்தார்.

பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட அவர், எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கத் தயாரானார். தனக்குள் இருந்த எழுத்தாற்றல் ஆர்வம் காரணமாக ஆங்கில இலக்கியம் படிக்க அவருக்கு அதிக ஆசை. மிகப் பெரிய எழுத்தாளர்களின் வரிசையில், தன்னைக் கருதிய ஜே.கே.ரவுலிங், தன்னை முழுநேர எழுத்தாளராகவே மனதுக்குள் கற்பனை செய்து வந்திருந்தார். தனது ஆர்வத்தை அவர் தயங்கியபடி சொன்னபோது, ஏழ்மையான பின்னணி கொண்ட அவரது பெற்றோர், ‘‘ஆங்கில இலக்கியம் சோறு போடாது. பிரெஞ்சு மொழி படித்தால் ஓர் அலுவலக உதவியாளர் வேலையாவது கிடைக்கும்’’ என்று வாதிட்டனர். 

வேறு வழியின்றி எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில், பிரெஞ்சு மற்றும் செவ்வியல் இலக்கியப் படிப்பில் சேர்ந்தார். சில நாட்களிலேயே தனக்குப் பொருத்தமில்லாத படிப்பில் சேர்ந்ததை நினைத்து நொந்துபோனார். பி.ஏ பட்டம் பெற்ற பின்னர் லண்டன் மாநகருக்குச் சென்ற ஜே.கே.ரவுலிங், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சில மாதங்கள் செயல்பட்டார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. அப்போது கொடுங்கோலாட்சி நடந்த நாடுகளில் இருந்து தப்ப முயன்றவர்களும், தப்பி வந்தவர்களும் எழுதும் அதிர்ச்சிகரமான கடிதங்களைப் படித்துக் குறிப்பெடுத்து வந்தார். மனிதர்கள் எத்தனை மோசமான சித்ரவதைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தார். அவர் எழுதிய நாவல்களில் இடம்பெற்ற சில அதீதச் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வேலையில் அவர் சந்தித்த அனுபவங்கள் அடிப்படையிலானவை. 

ஒருமுறை லண்டனுக்குச் செல்வதற்காக மான்செஸ்டர் ரயில் நிலையம் சென்றார். ரயில் வர 4 மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. காத்திருந்த வேளையில், அவருக்கு ஒரு புத்தம் புதிய சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. மந்திரஜாலப் பள்ளி ஒன்றில் படிக்கும் ஹாரி என்ற சிறுவனைப் பற்றிய காட்சிக் கதைச் சித்திரம் அது. ஒரு முழு நீளத் திரைப்படம்போல் உருவான அந்தக் கதைச் சித்திரம் அவருக்குள் புதிய உணர்வலைகளை எழுப்பியது. வீட்டுக்கு வந்த உடன் அதனைப் பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கிவிட்டார். 

அவர் தனது பிரமாண்டமான ஹாரிபாட்டர் நாவலை எழுதத் தொடங்கிய நேரத்தில், அவரது அம்மாவின் உடல் நலம் மோசமானது. தன்னை உயிருக்கு உயிராக நேசித்து, அரவணைத்துப் பாதுகாத்துவந்த தனது தாயாரின் மறைவு ஜே.கே.ரவுலிங்கின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது. அவரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை, எழுத்துப் பணியையும் தொடர முடியவில்லை. 

ஒரு மாற்றத்துக்காக போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள போர்டோ நகருக்குச் சென்ற ஜே.கே.ரவுலிங், அங்கு ஆங்கில ஆசிரியராக இரவு நேரப் பணியில் சேர்ந்தார். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதித் தள்ளினார். அங்கு, தான் சந்தித்த, தன்னைவிட வயதில் குறைந்த இளைஞர் ஒருவரை மணந்துகொண்டார். மகள் பிறந்தாள். மண வாழ்க்கை நீடிக்கவில்லை. கணவரால் துன்புறுத்தப்பட்டு, துரத்தப்பட்டார். மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். 

இங்கிலாந்திலும் உதவுவதற்கு யாரும் இல்லை. தந்தை மறுமணம் செய்துகொண்டு போய்விட்டார். தங்கையாலும் பெரிய உதவி செய்ய முடியவில்லை. பழைய நண்பர்கள் சிலர் சிறிதளவு பண உதவி செய்திட முன்வந்தபோதும், அதனை கைநீட்டி வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, தனது கைக் குழந்தையுடன் போராட்ட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

மற்ற குழந்தைகள் நிறைய விளையாட்டுப் பொருட்களோடு உற்சாகமாக விளையாடுவதைப் பார்க்கும் போதெல்லாம், தன் குழந்தைக்கு எதுவுமே தர முடியவில்லையே என்ற ஏக்கம் அவரது மனதை வலிக்கச் செய்தது. ஏமாற்றங்களும், சுய பச்சாதாபமும் அவரது மனநிலையைப் பாதிக்கத் தொடங்கியிருந்தன. அவரது குழந்தைக்கு ஒரு சிறிய விளையாட்டுப் பொம்மையை சமூகநலத் துறை ஊழியர் ஒருவர் இலவசமாக வழங்கியபோது, அதனைப் பிடுங்கி குப்பைத்தொட்டியில் போடும் அளவுக்கு அவர் மன அழுத்தத்தில் இருந்தார். 

மன அழுத்தத்தின் உச்சத்தில், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு எழுந்ததாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் மன அழுத்தம் குறைந்ததாகவும் அவர் பின்னாட்களில் தெரிவித்து உள்ளார். வறுமையுடன் போராட்டம் ஒருபுறம் இருக்க… துரத்தியடித்த கணவர்,  

ஜே.கே.ரவுலிங்கையும் குழந்தையையும் தேடி இங்கிலாந்து வந்துவிட்டார். போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்ட அவரால் பெரும் தொந்தரவுகள். அவரிடம் இருந்து மணவிலக்கு பெற ஜே.கே.ரவுலிங் பெரும்பாடு படவேண்டியிருந்தது. 

இத்தனைச் சோதனைகளுக்கு இடையிலும், ஜே.கே.ரவுலிங்கை நம்பிக்கை இழக்காமல் வைத்திருந்தது, அவரது எழுத்துப் பணி மட்டுமே. குழந்தையை எடுத்து வெளியில் சுற்றிவிட்டு, அந்தக் குழந்தை தூங்கும் நேரமெல்லாம் எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டார். பூங்காவிலோ, காப்பி கடையிலோ, வீட்டிலோ, வீதியிலோ, எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எழுதித் தள்ளினார். 


“வீடில்லாமல், பணம் இல்லாமல், கணவர் இல்லாமல், கைக்குழந்தையுடன் வாழ்ந்த அந்த நாட்களில் எனது வாழ்க்கை இருள்மயமானதாக இருந்தன. தோல்விகள் என்னைச் சூழ்ந்து நின்றன. அந்தத் தோல்விகள், என்னிடம் இருந்த தேவையற்றவை அனைத்தையும் பறித்து எறிந்து விட்டன. எதை எனது வாழ்க்கையின் தவப் பணியாக நினைத்தேனோ, அதில் மட்டுமே எனது முழு சக்தியையும் ஒன்றுகுவிக்கும்படி, தோல்விகள் என்னை விரட்டின”  என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் ஜே.கே.ரவுலிங்.

தனது முழு சக்தியையும் திரட்டி ஹாரிபாட்டர் முதல் பாகத்தை எழுதி முடித்தார் ஜே.கே.ரவுலிங். தனக்கு முழு திருப்தி ஏற்படும்வரை அதனை மெருகேற்றி, மிகுந்த நம்பிக்கையோடு பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். ‘பதிப்பிக்கத் தகுந்ததல்ல’ என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டது ஹாரிபாட்டர் நாவல்.  11 பதிப்பகங்கள் நிராகரித்த அந்த நாவலை, மனம் தளராமல் 12-வது பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார் ஜே.கே.ரவுலிங். 

ஹாரிபாட்டர் நாவலின் பிரதியை ப்ளூம்ஸ்பரி பதிப்பாசிரியர் படிக்கத் தொடங்கியபோது, அவரது 8 வயது மகளும் அதனைப் படிக்கத் தொடங்கினார். அந்தச் சிறுமி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கத் தருமாறு தனது அப்பாவிடம் கெஞ்சியபோது அந்த நாவல் குழந்தைகளைக் கவரும் என்று பதிப்பாசிரியர் புரிந்துகொண்டார். 

ஜே.கே.ரவுலிங்கை அழைத்து பதிப்பு ஒப்பந்தம் போட்டார். எதிர்பாராத மாபெரும் வரவேற்பைப் பெற்றன ஹாரிபாட்டர் நாவல்கள். தொடர் தோல்விகளைத் தாங்கிக்கொண்டு மனம் தளராமல் உழைத்த ஜே.கே.ரவுலிங்குக்கு வெற்றி மேல் வெற்றி. 

ஜே.கே.ரவுலிங் ஒருமுறை மாணவர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்: “உங்களில் யாரும் நான் சந்தித்த அளவுக்கு மோசமான தோல்விகளைச் சந்திக்கப் போவதில்லை. ஆனாலும் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அவை வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம்.”
 
சுசி திருஞானம்
நன்றி-விகடன்

Post a Comment

0 Comments