ஒன்பது வயது இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு ஆப்பிள் புரோகிராமர் பரிசு


இந்த ஆண்டு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின், உலக அளவிலான செயலிகள் வடிவமைப்பாளர்கள் கருத்தரங்கில் அனைவரது ஆச்சரியமும் மதிப்பும் கலந்த கவனத்தை ஈர்த்தவர் அன்விதா விஜய் என்னும் ஒன்பது வயதே ஆன, இந்திய வம்சாவளிப் பெண் ஆவார். இவர் தற்போது தன் பெற்றோர்களுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார். மவுண்ட் வியூ என்னும் தொடக்கப்பள்ள்யில், மூன்றாம் நிலை வகுப்பில் படித்து வருகிறார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஆப்பிள் டெவலப்பர் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர்களில், மிகக் குறைந்த வயதுடையவர் (9) இவர்தான். புரோகிராமர்களுக்க்கு, ஆப்பிள் நிறுவன அழைப்பின் பேரில், இக்கருத்தரங்கில் கலந்து கொள்வது, ஒரு பெரிய விருது ஆகும்.

குழந்தைகளுக்கான செயலி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என அன்விதா விஜய் முடிவெடுத்து, புரோகிராமிங் அறிந்து, செயலிகளை உருவாக்கியுள்ளார். முதலில் உருவாக்கிய GoalsHi செயலிக்கு, ஆப்பிள் நிறுவனம் பத்தாயிரம் டாலர் பரிசளித்துள்ளது. இரண்டாவதாக உருவாக்கிய ஸ்மார்ட்கின்ஸ் அனிமல்ஸ் (Smartkins Animals) என்ற செயலி அவருக்கு, ஆப்பிள் நிறுவன அழைப்பின் பேரில், புரோகிராமர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைத் தந்துள்ளது. புரோகிராமர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் இலக்காகக் கொண்டிருப்பது, இந்த கருத்தரங்கில், ஆப்பிள் நிறுவனத்தின் அழைப்பாளராகக் கெளரவம் பெற்று கலந்து கொள்வதைத்தான். இதனைத் தன் ஒன்பது வயதில் பெற்றுள்ளார், அன்விதா விஜய்.

100 விலங்குகளைக் காட்டி, சிறுவர்களை அவற்றின் பெயர் சொல்லிப் பழக்கப்படுத்த இவர் அமைத்து வழங்கிய “ஸ்மார்ட்கின்ஸ் அனிமல்ஸ்” செயலியை, ஆப்பிள் ஸ்டோரில் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பெறலாம். இலவசமாக ஐபோனிலும், ஐ பேடிலும் பதிந்து கொண்டால், குறைந்த எண்ணிக்கையில் மிருகங்கள் காட்டப்படுகின்றன. இவற்றை எப்படி அழைப்பது என குழந்தைகள் கற்றுக் கொண்டு, அந்தப் பக்கத்திலேயே தரப்பட்டுள்ள மைக் படத்தினை அழுத்தி, குழந்தைகள் மிருகங்களின் பெயர்களைக் கூறலாம். இது பதிவாகும். பின், அதனை இயக்கிச் சரியாகக் குழந்தைகள் கூறியுள்ளார்களா என்று சோதித்துக் கொள்ளலாம். மேலும் மிருகங்களை இணைக்க ஒரு டாலர் செலுத்திப் பெறலாம். இதனைப் பற்றி அறிய http://www.smartkins.com/ என்னும் தளம் செல்லவும். செயலியை ஐபேட் மற்றும் ஐபோனில் பதிந்து இயக்கிப் பார்க்க, ஆப்பிள் ஸ்டோர் செல்லவும்.

இந்த செயலியில், செல்லப் பிராணிகளாகவும், பண்ணை வீடுகளில் வளர்க்கும் பிராணிகளாகவும், (நாய், பசு, குதிரை போன்றவை) 30க்கும் மேற்பட்டவை உள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் யானை போன்ற காட்டு விலங்குகள் 30க்கும் மேலாகக் காட்டப்படுகின்றன. கடல் வாழ் பிராணிகள் (ஷார்க், கடல்குதிரை மற்றும் டால்பின் போன்றவை)பத்துக்கு மேல் உள்ளன. 20க்கும் மேற்பட்ட பறவைகள் வரிசையாக இடம் பெற்றுள்ளன. முதலை, ஆமை, வண்ணத்துப்பூச்சி போன்றவை ஒரு குழுவாகத் தரப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் GoalsHi என்ற ஒரு செயலியை, ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் வகையில் வடிவமைத்து ஆப்பிள் நிறுவனத்தின் பரிசைப் பெற்றிருந்தார். ஏழு வயதிலிருந்து செயலிகளை உருவாக்கி வருகிறார்.

இவர் இதற்காக, எந்த கம்ப்யூட்டர் பள்ளியிலும் புரோகிராமிங் குறித்துப் படிக்கவில்லை. யு ட்யூப்பில், புரோகிராம் எழுதுவதற்கான ‘கோடிங் பாடங்களை’ மீண்டும் மீண்டும் பார்த்து, கற்றுக் கொண்டு, இந்த செயலியை உருவாக்கியுள்ளார். 

அன்விதாவை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், கருத்தரங்கில் அறிமுகப்படுத்தினார். “உலகின் மிகச் சிறந்த புகழ் பெறக் கூடிய, மிகக் குறைந்த வயதுடைய புரோகிராமர்” என அவரைப் புகழ்ந்தார். “நான் ஒரு அப்ளிகேஷன் டெவலப்பராக உருவாக விரும்புகிறேன். அதன் மூலம், இந்த உலகில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்” என்கிறார் அன்விதா. அவர் ஒரு புரோகிராமராக உருவாவதன் மூலம், சிறந்ததொரு தொழில் முனைவோராக வர வேண்டும் என விரும்புகிறார். ஆப்பிள் கருத்தரங்கில் கலந்து கொண்ட தொழில் முதலீட்டாளர்களிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து கலந்துரையாடினார். 

பத்தாயிரம் டாலர் பரிசு பெற்ற இவருடைய GoalsHi என்னும் செயலி, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமானது. எப்படி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும், நேரத்தினை எப்படி நிர்வகிக்க வேண்டும், இலக்கு நோக்கிய நம் பணியை எப்படி கண்காணித்து தரம் உயர்த்த வேண்டும், குழுவாக எப்படி செயல்பட வேண்டும் எனப் பல வழிகளைக் காட்டுகிறது. இதனைப் பின்பற்றி, பயன்படுத்தினால், கடினமான வேலைப் பணி கூட எளிதாகத் தெரியும் என ஒருவர் பாராட்டுரை வழங்கியுள்ளார்.

அன்விதாவின் தாயார், புவனா விஜய், ஐ.பி.எம். நிறுவனத்தில், வர்த்தக ஆலோசகராக உள்ளார். அதனாலேயே, அன்விதாவிடம் வர்த்தக ரீதியாக உயர வேண்டும் என்ற ஆசையும், இலக்கும் ஆரம்ப முதலே இருந்து வந்ததாக அவர் தாயார் தெரிவித்துள்ளார். சிறு வயது முதல், ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிறந்த முன் மாதிரி தலைவராக இருந்தார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்விதாவிடம் புரோகிராம் அமைப்பது குறித்து கேட்டபோது, “கருத்தாகத் தோன்றும் மிகப் பெரிய பணி முதலில் ஒரு தோற்றமாக நம் முன் இருக்கும். ஆனால், அதனைச் செயலியாக மாற்றுவது சற்று கடினமான பணியாகும். புரோட்டோ டைப், டிசைன் அமைப்பு, இணைப்பு, பயனர் இடைமுகம் அமைப்பது, புரோகிராம் எழுவது, அதனைச் செயல்படுத்திச் சோதனை செய்வது, பிழைகளைச் சரி செய்வது எனப் பன்முகப் பணியாகும் அது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீ வளர்ந்து பெரியவளாக வருகையில் என்னவாக உருவாக விரும்புகிறாய்? என்று கேட்டபோது, “நான் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவராக வளர விரும்புகிறேன். அப்போதுதான், மக்கள் கற்றுக் கொண்டு, அதன் மூலம் பயனடையும் வகையிலான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்” என்றார். “தொழில் நுட்பத்தின் மூலம், மக்களுடைய வாழ்க்கையில், ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறேன்” என்று தன்னுடைய பெயர் மற்றும் நிறுவன அட்டையில் குறிப்பிட்டுள்ளார். “என்ன ஓர் அருமையான உயர்ந்த நோக்கம்” எனப் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் அவர்களைச் சந்திப்பது தன் பல நாள் இலக்காக இருந்தது என இவர் தெரிவித்துள்ளார். எனவே, அதற்கான விண்ணப்பத்தினை ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பி, தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு பெறுள்ளார். 

ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய இந்த டெவலப்பர் கருத்தரங்கில், மாணவர்களாயுள்ள 350 புரோகிராமர்கள் அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர். இவர்களில், 120 பேர், 18 க்கும் குறைவான வயதுடையவர்களே. இதற்கென விண்ணப்பித்தவர்களில், பெண்களே அதிகம் இருந்தனர். சென்ற ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு எண்ணிக்கையில், பெண்கள் விண்ணப்பம் அனுப்பி இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 22 சதவீதம் பேர் பெண்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments