கணினித் தாலாட்டு!

ஆராரோ ஆரிரரோ, ஆரிரரோ ஆராரோ!

கண்மணியே, என்றென்றும் தூங்காக் கணிப்பொறியே!
மரகதமே, தேடாமல் கிடைத்திட்ட சுட்டெலியே!
ரத்தினமே, பொத்திவைத்துப் பார்த்திடும் வன்தட்டே!
முத்தினமே, முயற்சிசெய்து சேர்த்திட்ட‌ மென்பொருளே!

பொருத்தமாய் நிகழ்வுகளைக் கோர்த்திருக்கும் நினைவகமே!
ஒருங்கமைந்த கதிர்வந்து சுழ‌ற்றிவிடும் குறுந்தகடே!
பொருள்சிறந்து பல‌வண்ண மைகாட்டும் அச்சகமே!
அருள்சிறந்து மெல்லிசை தவழுமொலி பெருக்கியே!

மாமா அடிச்சாரோ மின்சன்ன‌ல் வழிவந்து?
அக்காள் அடிச்சாளோ மின்னஞ்சல் உடன்வந்து?
யாரடிச்சா சொல்லியழு ஒலிவாங்கியில் வந்துஅழு
யாரடிச்சுப் போனாலென்ன தாய்ப்பலகை நானிருக்கேன்!

கண்மணியே, என்றென்றும் தூங்காக் கணிப்பொறியே!
ஆராரோ ஆரிரரோ, ஆரிரரோ ஆராரோ!

Post a Comment

0 Comments